Friday, December 28, 2012

ஒரு 'குறுக்கிய' மரத்தின் குலுங்கும் அழுகை

ஒரு 'குறுக்கிய' மரத்தின்('போன்ஸாய்''.ன்)குலுங்கும் அழுகை--
(நாட்டுப்பாடல்--கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)-

வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா?-சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா?- எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?
(*ஜப்பான் குள்ளன்)

அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா?-தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா?-அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா?-மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா?-என்ன
தெய்வக்'குத்தம்' செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா?-சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ-முறுக்கறேடா!
உன்நாத்த குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ?-ஏன்!
ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும்-மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ?-எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

'சைக்கோசெல்' திரவம்விட்டு மேலும் குறுக்கறே!-உன்
'சைக்கோத்'தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா!-பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ?-'மர'
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ?-அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது!-நீ
செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா?-மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?

Tuesday, September 25, 2012

கற்பதெப்போ?

கற்பதெப்போ?

வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
வாகாய்க் குழைப்பவன் நீயா?
கூனல் இளம்பிறைச் சில்லில்  அழகினைக்
கூட்டும் சிற்பியும் நீயா?

வண்ணத்துப் பூச்சியின் றெக்கையைப் பிடித்தே
வர்ணம் தீட்டுவோன் நீயா?
சுண்ணமே தீட்டாது  புறாவினில் வெண்மையைச்
சுடரவே  விட்டவன் நீயா?

என்னஓர் விந்தையும்  இஃதுபோல் செய்யாமல்
எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாகச்
செய்திடும் தன்னல மானிடனே!

மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

பாதையில் போகையில் வாகனம் மோதினால்
பார்த்துநீ  ‘அவரை’யே காத்ததுண்டா?
சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
சுணங்காது உதவிகள் செய்ததுண்டா?

பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
‘தேவனாய்’ உயர்--வழி என்றுகற்பாய்?

Sunday, August 5, 2012

கணினி நொந்து பேசுகின்றேன்!

கணினி நொந்து பேசுகின்றேன்!

என்ன தந்திர உலகமடா!-மனிதா!
.. இதுவும் உனக்கொரு பிழைப்போடா?
என்னில் இருக்கிற பணந்தன்னை-ஒரு
.. எண்ணைக்*கொடுத்தபின் எடுக்கின்றாய்;
வன்ன ஆமையின்  முட்டைகண்டே
.. வாகாய்ப் பாம்புமே திருடுதல்போல்
உன்னிப் பாய்உனைக் கவனித்தே
..ஒருவன் உன்பணம் கொள்ளைசெய்வான்!..(என்ன..)
* ஏ.டி.எம்-பாஸ்வர்டு

கன்னிப் பெண்களின் வரன்தேட,
.. கார்டு மூலமே பொருள்வாங்க,
முன்னம் பாடிய பலர்பாடல்
.. மூன்று வேளையும் கேட்டுவிட,
சின்னத் தகவலும் *உறவினர்கண்....(*ஈமெயில்)-
.. செலவே இன்றிநீ சேர்த்துவிட,
என்றே எத்தனை உதவிசெய்தேன்!
.. என்னுள் கிருமிகள்* புகுத்துவதோ?..(என்ன..)
*(வைரஸ்)

என்னைத் தட்டியே முழுஉலகை
.. எட்டிப் பார்த்துமே மகிழ்கின்றாய்!
என்ன படிப்புமே என்மூலம்
.. எளிதில் கற்றுநீ வாழ்கின்றாய்!
உன்றன் பேரனும் தொலைதூரம்
.. உள்ள பாட்டனைக் காண்கின்றான்!*.....(*Chat மூலம்)-
என்ன செய்தும்என்? இதோபரி(சு)என்***
.. றெங்கோ ஒருவனை ஏய்க்கின்றாய்!*...(என்ன..)
(* by Fraud emails)-

காலை யில்காப்பி! பின்கணினி !
.. கடையில் வறுவலை  வாங்கிடவும்,
ஓலை இன்றியே கற்றிடவும்,
.. ஒற்றைக் காசுமே தராமலதை
நாலைந் துபேர்க்குமே விற்றிடவும்,
.. நல்ல   'கொள்ளைகள்‘அடிக்க-எனை
வேலை செய்யவே வைத்துவிட்டாய்;
.. விஷமம் செய்வதேன்  ‘செக்ஸ்- ‘இழை’யில்?’..(என்ன..)

ஸீரோ(‘0’)- ஒன்றையே உண்கின்றேன்!
.. சிறப்பாய் உனக்கென உழைக்கின்றேன்!
யாரோ தொடினும் வரமாட்டேன்!
.. எனக்காய்க் குறிப்பு*எண்  நீதந்தால்!...(*பாஸ்வொர்ட்)-
நேராய் உலகினை வலம்வருவேன்;
.. நிறைய  ‘கூகிலில்’* பொருள்தருவேன்;..(*google)-
சீராய் என்னைநீ வைத்திலையேல்
.. சிறப்பும் உனக்குமே வந்திடுமோ?...(என்ன..)

Wednesday, May 30, 2012

ஊதுபத்தி

ஊதுபத்தி

தமிழர்கள் நகைச்சுவையாய்ப் பேரை வைத்துத்
...தம்போக்கில் சிரிக்கவைப்பர்!;.ஒல்லி ஊசி
அமைதியாய் உதவுகையில் ‘குண்டு’ -ஊசி
..எனஅழைத்தே அதைப்போய்க்கிண் டலடிப் பார்கள்!
மமதையில்லா மாமியைப்போய் ‘ஊதிவிட் டாயே
..மாலு!’என்றே நகைப்பதுபோல் குச்சி என்னைச்
செமையாகச் சீவியபின் என்மேல் தூளைத்
..தீண்டிவிட்டு,..’ஊது-பத்தி’என்ன லாமா?


அழுதழுது புகையாகக்  ‘கரை’யும் என்னை
...அநியாயம்!  ‘ஊதிய’ஓர் பத்தி என்றால்?
அழுகின்றேன்;-உமைச்சுற்றி மணக்க வைக்க
..அபலைநான் கிடைத்தேனோ? உடம்பே போச்சே!
பழுதுபட்டேன் என்றாலும் கடவுள் முன்பு
..பற்றவைத்தீர்! போகட்டும்! உம்உ டம்பின்
அழுக்குமணம் சன்னதியில் சேரா வண்ணம்
...அழகுறவே நான்மறைப்பேன்! தியாகி யானே!


நாத்திகனோ  ‘சிகரெட்டை’அருகில் ஊதி
..நானு(ம்)உன்போல் புகைவிட்டேன்! எனம கிழ்வான்!
சாத்திரம்போல்  ‘நான்நீயும்’ ஒன்றே என்பான்;
..சன்னதிக்கே வந்துபுகை விடுவேன் என்பான்!
ஆத்திரமே படுகின்றேன்; திருத்து வார்-யார்?
..அதோ!ரயிலும் புகைவிடுமே..!எல்லாம் ஒன்றா?
ஆத்திகனாய் மாறியபின்  ‘அகம்’க ரைந்தே
..ஆண்டவன்முன் ‘அழுது’ஒன்றும் தத்துவம் யான்!


இந்தஉண்மை தனைப்புகையாய் ஊதிச் சொல்லும்
..எளியவன்யான் என்றுணர்ந்தே பக்தர் எல்லாம்
வந்தித்தே ‘ஊதுபத்தி’ எனப்பேர் தந்தார்!--
..வக்கணையாய் எனைஏற்றி கடவுள் முன்னர்
பந்தமுடன் சுற்றிடுவார்! பக்தி கொண்டே
..பாடிடுவார்! நெடுநேரம் மணந்து நிற்பேன்!
சொந்தமென எனைப்புகழும் தமிழர் நீங்கள்
..தூயஇந்தத் தத்துவம்-பின் பற்று வீரே!!

ரமணத் தேன்கூடு!

ரமணத் தேன்கூடு!

அண்ணா மலையிலோர் தேன்கூடு!-உள்ளே,
.. அழகிய ராணி “ஈ” முனி.யோடு!....
‘ரமணம்’ சாய்ந்தே அமர்கிறது!-சமாதி
   . ரகசியம் பொங்கி வழிகிறது!
அமைதியிலோர் ‘அக்னியே’ பூக்கிறது!-(ஆம்)அது
   ..அவரது கண்ணாய் மலர்கிறது!
ஞானம் கமழ்ந்திடும் நந்தவனம்!-அந்த
   .ஞானியைச் சுற்றிப்பல் அன்புமனம்!
ஊனம்,..அமர்ந்தாலே ஓடிடுதே!-தேவர்
   .உலகம் நமக்குள் விரிகிறதே!
குகையுள் அலர்ந்தநல் தாமரையாம்!-ரமணர்
   .கூட்டிய ‘நிஷ்டை’ஓர்  பாற்கடலாம்!
திகைந்தனர் பக்தர்கள் சேவையிலே!-கூடித்
   .தெவிட்டா  அமுதம் பருகினரே!
குரங்குகள், நாய்கள், பசுக்களுமே-அருள்
   .குவிந்த ரமணர்ப் பசங்களுமாம்!
அருமை!.அவர்க்கெலாம் முன்னுரிமை!-மடி
   .அமர்ந்துமே உண்ணல் தனி-உரிமை!
ஒருசொல்,அறிவுரை ஏன்இல்லை?-கேள்விக்(கு)
   .ஒன்பது நாள்போல் பதில்இல்லை?
பெரிய மனிதரும் காத்திருப்பு!-ரமணரின்
    ‘ப்ரம்ம’ மவுனத்தில் விடையிருக்கு!
எத்தனை எண்ணம்!கலக்கங்கள்!-கண்ணுடன்
  .இழைந்து கலந்தால் மறைந்திடுதே!
முத்துக் குளிக்கவே வாருங்களேன்!-அட!
   .மூழ்கியே இன்பமாய்ச் சேருங்களேன்!!

Friday, December 16, 2011

குஜராத்தில் ஒரு வள்ளி!

குஜராத்தில் ஒரு வள்ளி!

எத்தனை கொஞ்சமாய்த் தந்தாலும்
..எந்தவே லையையும் அன்றுசெய்தார்!
இத்தனை ரூபாய் கொடுத்தால்தான்
..இன்றைய வாலிபர் செய்வனென்பார்!

இந்த நிலைஎண்ணி ஓர்நாள்யான்
...என்றன் சகோதரன் காரிலேயே
அந்தக்  ‘குஜராத்தின்’  ‘சண்டிப்பூர்’
...அழகு நகரினைச் சுற்றிவந்தேன்!

பாதை மருங்கிலே ஆலமரம்,
..பாக்கும், அசோகும் இலையசைக்கும்;
வேதனை வெய்யிலின் சூட்டை,அவை
...வெகுவாய்க் குறைத்து வரவேற்கும்!

 “அண்ணா!அதிசயம் இவ்வூர்தான்!
...அழகுக் கடற்கரை பார்ப்பாய்நீ!.”-
  எண்ணி இருமுறை சொல்லிடும்முன்
...இருவரும் கீழே இறங்கிநின்றோம்!

‘ஆகா! பலேபலே!’ என்றேன்யான்!
...ஆகாயம் மேகமுடன் ஓடுதல்போல்
பாகாய்க் கடல்நீர் பயத்துடனே
..பட்டென்(று)என் கால்தொட்டுப் பின்வாங்கி

ஓடியதும் அச்சமுடன் கூவிவிட்டேன்!
..உடன்தம்பி சொன்னான்!  “சிறப்பிதுவே!
நாடிவரும் சுற்றுலா மாந்தரைப்பார்!
..நாலுமணி நேரமிங்குக் காத்திருப்பார்!

பின்வாங்கும் நீர்ஒரு- ஐந்துமைல்கள்!
..பிறகுபார்! ஆச்சர்யம்! ஓடிவரும்!
என்னவோ தாகமுடன் காதலியை
..இன்பமாய்ப் பார்க்க நழுவுதல்போல்

நாலுமணி ஓடிப்பின் மீண்டுவரும்!
..நம்முடனும் கொஞ்சமாய்ப் பேசவரும்!
கோலமிதைப் பார்க்கத் தினம்நூறாய்
..குழுமுவர் மக்கள்! படம்எடுப்பர்!.”-

மூக்கில் விரல்வைத்துக் கேட்கையிலே
..முன்நின்றாள் ஓர்சிறுமி பைகளுடன்!
மூக்கிலே பாசிமணி--ஓட்டையிட்டு!
..முரண்பட்ட தோடுகள் காதுகளில்!

மேனியில் பட்டினில் ஜாக்கெட்டு!
..மிகக்கிழிசல் பாவாடை கால்தொட்டு!
மேனியின் வண்ணமோ மாநிறம்தான்!
..மிகநீண்ட கண்வரை, புன்சிரிப்பு!

 “நண்டுசார்! ஓர்ரூபா! வாங்குங்க!-
.....நல்லதுசார்!  ‘புச்சு’சார்! பார்த்துக்குங்க!
 கொண்டுஅவள் என்கை பிடித்ததுமே
....கூச்சமுடன் சொன்னேன்யான்,  “வேண்டாமே!”

 “கத்தரிக்கா கொண்டுவா வாங்கிடுவோம்!
......கரைநண்டை நெஞ்சாலும் நாங்கதொடோம்!-”
  ‘பத்ரி’தம்பி கண்சிமிட்டிச் சொல்லிடுவான்!
...“பாப்பா! தமிழ்நல்லாப்  பேசறியே!”-

“ஆம்சார்ரு!-நாங்கமத்ராஸ் காரங்கதான்!
...அங்கே பொழப்புக்குப் பஞ்சம்தான்!
‘வேம்பம்மா-’ச் சித்தியோடு இங்குவந்தோம்!
...விதவிதமா மீன்பிடித்தே விற்கின்றோம்!-”

“உங்கப்பா என்னவேலை செய்யறாரு?”-
...“ஓடிஓடி சைக்கிள்ரிக்‌ஷா ஓட்டறாரு!
எங்கம்மா கூடைபோட்டு மீன்பிடிப்பா!
...இந்த‘தண்ணி’ பின்-ஓட, எங்கவாழ்வு!”

உன்பேர்தான் என்ன?என்றேன்; ‘வள்ளி’என்றாள்!
...ஒருஸ்கூலும் போகலியா? என்னுமுன்னே
என்னங்க நாலாங்க்ளாஸ் படிக்கிறேங்க!
...எல்லாப் பரிட்சயிலும் ‘ஃபஸ்ட்’நான்க!-”

என்றுசொல்லி  ‘இங்கிலீஷ்ரைம்’ பாடிநின்றாள்!
...இதற்குள்ளே மூவரிடம் நண்டும்விற்றாள்!
நன்றுநன்று என்றே புகழ்ந்துரைத்து,
...“நாளுக்கும் என்னரூபா கிட்டுமென்றேன்”

“அடபோங்க!..பத்துநண்டு அம்பதுகாசு(னு)
.....அடிச்சுசொல்லி கைதிணிச்சு வாங்குறாங்க!
முடவங்க தேனுக்கா  ‘ஆசெ’வெப்போம்?
......முடிஞ்சவரை வித்துபிட்டு ஸ்கூல்போவென்!

வாரநாள்ல பைஒண்ணும் விக்காது(சார்!)-
...மத்தநாள் ஞாயிறன்னி கூட்டம்வரும்!
சூர்யன் உதிக்குமுன்ன இங்குவந்து
...சொரசொரன்னு நீர்ஓட நண்டுபிட்சு

மாலையிலும் பையவித்து ராவுபடிப்பேன்!
...மனசார அஞ்சுரூபா ஜேப்லவப்பேன்!
‘கூலான’ அச்சிறுமிச் சொல்கேட்டு
....கொடகொடெனக் கண்ணில்நீர் கொட்டுதய்யா!

 “சரியம்மா (ரூ)அஞ்சுக்காய் ஏன்கஷ்டம்?
.....சாப்பிட்டு வீட்டில் படிக்கலாமே!..”--
 “சொரிஞ்சுகினு வீட்டிலஏன் நிற்கோணும்?
.....சொதந்த்ரமா அஞ்சுரூபா கிட்டுறப்போ?

அஞ்சுரூபா உப்புபுளி வத்தல்க்காவும்!
...அப்பாம்மா நெஞ்சமும்நி றஞ்சிருக்கும்!.”--
‘கொஞ்சி’சொன்ன வள்ளிகையில்  ‘பத்து’வைத்தேன்!
...கோபமுடன் ஓர்முறைப்பு,.. கண்ணிலய்யா!

 “என்னய்யா? பிச்சகாரி இல்லநானு!-
.....எங்கிட்ட பையயும்நீ வாங்கலய்யா!
  உன்காசை  வச்சுக்கோ!-”கைதிணித்தாள்!--
.......உயர்ந்துநின்றாள்! கண்முன்னே தெய்வமானாள்!

Friday, July 1, 2011

குடைவானம் கூப்பிடுதூரம்?!!


குடைவானம் கூப்பிடுதூரம்?!!


என்ன(து)அது? குடைவானம் கிட்டே எட்டியதா?
சன்னமாம் பொய்யைச் சாதத்தில் கலந்துவைத்து
..
ஆலைத்- தொழிலாளிக்கு ’வர்ண’ அன்னம் அளிப்பதுபோல்
ஓலை விடுவீரோ? உடனேயான் யோசியேனோ?
..
கண்ணுக்கே  அதுமாயக் குடைகவிப்பு! உண்மையிலே
பெண்ணுக்குள் ரகசியங்கள் பீறிட்டுப் புதைந்ததுபோல்,
..
மண்ணுக்குள் வைரஒளி மயங்கித் திகைப்பதுபோல்
சுண்ணாம்பில்  ‘அக்னியும்’ சொகுசாய்த் தூங்குதல்போல்,
..
மகானின் அழுக்குடைக்குள் மாமாயச் சித்துகள்போல்
பகாசுர வயிறாய் இவ்வானம் பம்மாத்து!
..
விமானம் போகையிலே விழிதிறந்து பாருங்கள்!
அமானுஷ்ய மேகங்கள் அத்துணையும் திரண்டுறையும்!
..
அத்தனையும் ஒரேநேரம் மண்மேலே ஆசைவைத்தால்
முத்தனைய பெண்களுடன்.. மூழ்கிவிடும் அபாயம்தான்!
..
வானுக்கு மூடியில்லை! வயதில்லை! தூரமில்லை!
தேனுக்கு மரணமுண்டோ? வானுக்(கு)அ ளவுகோலோ?
..
வானுக்குள் எத்தனைதான் பொக்கிஷங்கள்? மாமாய
ஊனுக்குள் ஓர்’கிழவன்!’ உயர்ந்த-ரத்தம்  பொதிந்தாற்போல்,
..
விண்மீனை அகப்படுத்தி அதுசிரிப்பாய்ச் சிரிக்கிறது!
கண்ணை வியப்பாக்கிக் ’காலம்’-தூள் செய்கிறது!
..
சூரியனைக் கவியாக்கித் தொன்ம’வரம்’ தருகிறது!
பாரிலதை நிதநிதமும் பவனி வரச்செய்து,
..
பூமியில் இருபுறமும் புதுவிழிப்புத் தருகிறது!
சாமி! அவ்வானம் மேல்நாட்டில் குளிர்தந்தே,
..
ஊதுலையில் போட்டதுபோல் சென்னையிலே கலாய்க்கிறதே!
சாதுவா வானம்? சட்டென்று கைக்குள்வர?
..
மாமாயம், மகாமந்த்ரம், மாச்சித்து,மா-விரிப்பு,
மாமா பாய்வதுபோல் தூமகேதுச் சாத்தான்கள்,
..
எல்லாமே கொண்டுஅது எம்டன்போல் விளங்கிட,..நீர்
கல்லாரும் அறிந்தஅதைக் கைக்குள்தான் இருக்குதென்றீர்!
..
கவியாலே ககனம்போய்க் கனவு பலகண்டு
புவியிலே ’பொடிசு’ நாம் புதையலைப்போய்த் தொடுவதுவா?
..
கண்ணற்றோன் யானையுரு கண்டு விளக்குதல்போல்
புண்ணுற்றோன் முதலிரவில் பூபாளம் பாடுதல்போல்,
..
’புதுக்கவி’ஞன் மரபிலே காவியம்செய்க் கனவைப்போல்
மதுஉண்டோன் அருள்வாக்காய் மகான்போல் உளறுதல்போல்
..
நல்லகவி நானும் பஜனைபோல் நடித்திலனே!
தொல்லைதரும் இவ்வானம் மிகநிஜமாய் வெகுதூரம்!!
..
ரகசியத்தைப் பிளந்துணர ராட்சச னாநான்?
குகையிருட்டை மலைக்குள்போய்க் குடைந்துதர, பித்தனாநான்?
..
ஒன்றுமில்லை, நம்ரத்தம் முதலிலெங்கு ஊறுமென்றே
தின்றுகொழுத் தபலருக்குத் தெரியாத விந்தையைப்போல்
..
கூப்பிட்டு அதைஅழைக்கக் குடைவிரித்தும் நினையேனே!
சாப்பிட்டு  என்கருத்தைச் சரியாகச் சீரணிப்பீர்!
..
அறிவாலே ஒருபக்க வாதத்தை அரங்குவைத்தேன்!
திறமுடையோர் கவிகாள்நீர்! சண்டைசெய்யச் சேருவிரே!