Friday, December 28, 2012

ஒரு 'குறுக்கிய' மரத்தின் குலுங்கும் அழுகை

ஒரு 'குறுக்கிய' மரத்தின்('போன்ஸாய்''.ன்)குலுங்கும் அழுகை--
(நாட்டுப்பாடல்--கொத்தமங்கலம்சுப்பு பாணியில்..!)-

வான்நிலவெப் பிடிச்சுவெச்சுக் குடத்தில் அடைப்பதா?-சாமி!
மரம்என்னெக் குறுக்கவெச்சுத் தொட்டி வைப்பதா?
மானெப்போயி வண்டுசைஸ்ல  மாத்தி மகிழ்வதா?- எவனோ*
மந்திரம்போல் செய்ததெநீ காப்பி அடிப்பதா?
(*ஜப்பான் குள்ளன்)

அகத்தியனா என்னெஆக்க இந்தப் படுத்தலா?-தொட்டி
அதனெயேநீ வெளியில்வச்சு பணத்தெப் பார்ப்பதா?
முகம்முழுக்க அழுவறேன்உன்  காதில் விழலையா?-அசுர
முட்டாள்உன் உறுப்பெவெட்டிக் காசு பார்ப்பயா?

ராமாயணம்  ஒத்த‘வரி’ல சொன்னா சுகமோடா?-மூடா!
ராகம்பாட மேடைக்கிவந்(து) ஒப்பாரி வச்சேடா!
தேமேன வளர்றகிளையெ நறுக்குற யேடா?-என்ன
தெய்வக்'குத்தம்' செஞ்செனென்(னு) இத்தெப் பண்றேடா!

உன்னோட கொலவெறிக்கி நான்தான் பலியோடா?-சில
உளுத்தகம்பி யாலசுத்திக் கையெ-முறுக்கறேடா!
உன்நாத்த குடைவடிவில என்னெ வளர்க்கணுமோ?-ஏன்!
ஓர்அருவியெ  என்உருவில பார்த்து மகிழணுமோ?

அப்படியும் முயற்சிசெஞ்சு  துளிரெவிட் டாலும்-மடயா!
அழுத்தமாக அத்தெக்கிள்ளிச் சிரிக்கிற யேடா!
தப்படிகள் வெக்கிறதுதான் மனிச நோக்கமோ?-எங்க
சாபங்களெ வாங்கறதுக்கு  ரொம்ப ஏக்கமோ?

'சைக்கோசெல்' திரவம்விட்டு மேலும் குறுக்கறே!-உன்
'சைக்கோத்'தனத்தெ எங்கிட்டகாட்டி நீயே சிரிக்கறே!
வைக்கோல்ல உன்னெத்திணிச்சுப்  பார்க்க ஆசைடா!-பாவி
வருகுதடா ஆத்திரமாய் உன்னெயப் பார்த்தடா!

உன்குழந்தெ பெரிசாறதுல ஆசையிருக் காதோ?-'மர'
உறவினரெப் பார்த்(து)எனக்கும் ஏக்கமி ருக்காதோ?
உன்குழந்தெ கையாட்டுனா சிரிக்க மாட்டயோ?-அடஎன்
ஓவ்வோர்இலை நறுக்கும்போதும் உணர மாட்டயோ?

தென்றல்பாத்துத் தலையஆட்ட உணர்ச்சி எழும்புது!-நீ
செஞ்சவேலை  யாலஒடம்பில் கோபம்  பொங்குது!
“மன்றம் ஐ.நா.” என்சார்புல பேசக் கூடாதா?-மனுச
மண்டயிலதட்ட சட்டமொண்ணு செய்யக் கூடாதா?