Friday, December 16, 2011

குஜராத்தில் ஒரு வள்ளி!

குஜராத்தில் ஒரு வள்ளி!

எத்தனை கொஞ்சமாய்த் தந்தாலும்
..எந்தவே லையையும் அன்றுசெய்தார்!
இத்தனை ரூபாய் கொடுத்தால்தான்
..இன்றைய வாலிபர் செய்வனென்பார்!

இந்த நிலைஎண்ணி ஓர்நாள்யான்
...என்றன் சகோதரன் காரிலேயே
அந்தக்  ‘குஜராத்தின்’  ‘சண்டிப்பூர்’
...அழகு நகரினைச் சுற்றிவந்தேன்!

பாதை மருங்கிலே ஆலமரம்,
..பாக்கும், அசோகும் இலையசைக்கும்;
வேதனை வெய்யிலின் சூட்டை,அவை
...வெகுவாய்க் குறைத்து வரவேற்கும்!

 “அண்ணா!அதிசயம் இவ்வூர்தான்!
...அழகுக் கடற்கரை பார்ப்பாய்நீ!.”-
  எண்ணி இருமுறை சொல்லிடும்முன்
...இருவரும் கீழே இறங்கிநின்றோம்!

‘ஆகா! பலேபலே!’ என்றேன்யான்!
...ஆகாயம் மேகமுடன் ஓடுதல்போல்
பாகாய்க் கடல்நீர் பயத்துடனே
..பட்டென்(று)என் கால்தொட்டுப் பின்வாங்கி

ஓடியதும் அச்சமுடன் கூவிவிட்டேன்!
..உடன்தம்பி சொன்னான்!  “சிறப்பிதுவே!
நாடிவரும் சுற்றுலா மாந்தரைப்பார்!
..நாலுமணி நேரமிங்குக் காத்திருப்பார்!

பின்வாங்கும் நீர்ஒரு- ஐந்துமைல்கள்!
..பிறகுபார்! ஆச்சர்யம்! ஓடிவரும்!
என்னவோ தாகமுடன் காதலியை
..இன்பமாய்ப் பார்க்க நழுவுதல்போல்

நாலுமணி ஓடிப்பின் மீண்டுவரும்!
..நம்முடனும் கொஞ்சமாய்ப் பேசவரும்!
கோலமிதைப் பார்க்கத் தினம்நூறாய்
..குழுமுவர் மக்கள்! படம்எடுப்பர்!.”-

மூக்கில் விரல்வைத்துக் கேட்கையிலே
..முன்நின்றாள் ஓர்சிறுமி பைகளுடன்!
மூக்கிலே பாசிமணி--ஓட்டையிட்டு!
..முரண்பட்ட தோடுகள் காதுகளில்!

மேனியில் பட்டினில் ஜாக்கெட்டு!
..மிகக்கிழிசல் பாவாடை கால்தொட்டு!
மேனியின் வண்ணமோ மாநிறம்தான்!
..மிகநீண்ட கண்வரை, புன்சிரிப்பு!

 “நண்டுசார்! ஓர்ரூபா! வாங்குங்க!-
.....நல்லதுசார்!  ‘புச்சு’சார்! பார்த்துக்குங்க!
 கொண்டுஅவள் என்கை பிடித்ததுமே
....கூச்சமுடன் சொன்னேன்யான்,  “வேண்டாமே!”

 “கத்தரிக்கா கொண்டுவா வாங்கிடுவோம்!
......கரைநண்டை நெஞ்சாலும் நாங்கதொடோம்!-”
  ‘பத்ரி’தம்பி கண்சிமிட்டிச் சொல்லிடுவான்!
...“பாப்பா! தமிழ்நல்லாப்  பேசறியே!”-

“ஆம்சார்ரு!-நாங்கமத்ராஸ் காரங்கதான்!
...அங்கே பொழப்புக்குப் பஞ்சம்தான்!
‘வேம்பம்மா-’ச் சித்தியோடு இங்குவந்தோம்!
...விதவிதமா மீன்பிடித்தே விற்கின்றோம்!-”

“உங்கப்பா என்னவேலை செய்யறாரு?”-
...“ஓடிஓடி சைக்கிள்ரிக்‌ஷா ஓட்டறாரு!
எங்கம்மா கூடைபோட்டு மீன்பிடிப்பா!
...இந்த‘தண்ணி’ பின்-ஓட, எங்கவாழ்வு!”

உன்பேர்தான் என்ன?என்றேன்; ‘வள்ளி’என்றாள்!
...ஒருஸ்கூலும் போகலியா? என்னுமுன்னே
என்னங்க நாலாங்க்ளாஸ் படிக்கிறேங்க!
...எல்லாப் பரிட்சயிலும் ‘ஃபஸ்ட்’நான்க!-”

என்றுசொல்லி  ‘இங்கிலீஷ்ரைம்’ பாடிநின்றாள்!
...இதற்குள்ளே மூவரிடம் நண்டும்விற்றாள்!
நன்றுநன்று என்றே புகழ்ந்துரைத்து,
...“நாளுக்கும் என்னரூபா கிட்டுமென்றேன்”

“அடபோங்க!..பத்துநண்டு அம்பதுகாசு(னு)
.....அடிச்சுசொல்லி கைதிணிச்சு வாங்குறாங்க!
முடவங்க தேனுக்கா  ‘ஆசெ’வெப்போம்?
......முடிஞ்சவரை வித்துபிட்டு ஸ்கூல்போவென்!

வாரநாள்ல பைஒண்ணும் விக்காது(சார்!)-
...மத்தநாள் ஞாயிறன்னி கூட்டம்வரும்!
சூர்யன் உதிக்குமுன்ன இங்குவந்து
...சொரசொரன்னு நீர்ஓட நண்டுபிட்சு

மாலையிலும் பையவித்து ராவுபடிப்பேன்!
...மனசார அஞ்சுரூபா ஜேப்லவப்பேன்!
‘கூலான’ அச்சிறுமிச் சொல்கேட்டு
....கொடகொடெனக் கண்ணில்நீர் கொட்டுதய்யா!

 “சரியம்மா (ரூ)அஞ்சுக்காய் ஏன்கஷ்டம்?
.....சாப்பிட்டு வீட்டில் படிக்கலாமே!..”--
 “சொரிஞ்சுகினு வீட்டிலஏன் நிற்கோணும்?
.....சொதந்த்ரமா அஞ்சுரூபா கிட்டுறப்போ?

அஞ்சுரூபா உப்புபுளி வத்தல்க்காவும்!
...அப்பாம்மா நெஞ்சமும்நி றஞ்சிருக்கும்!.”--
‘கொஞ்சி’சொன்ன வள்ளிகையில்  ‘பத்து’வைத்தேன்!
...கோபமுடன் ஓர்முறைப்பு,.. கண்ணிலய்யா!

 “என்னய்யா? பிச்சகாரி இல்லநானு!-
.....எங்கிட்ட பையயும்நீ வாங்கலய்யா!
  உன்காசை  வச்சுக்கோ!-”கைதிணித்தாள்!--
.......உயர்ந்துநின்றாள்! கண்முன்னே தெய்வமானாள்!

Friday, July 1, 2011

குடைவானம் கூப்பிடுதூரம்?!!


குடைவானம் கூப்பிடுதூரம்?!!


என்ன(து)அது? குடைவானம் கிட்டே எட்டியதா?
சன்னமாம் பொய்யைச் சாதத்தில் கலந்துவைத்து
..
ஆலைத்- தொழிலாளிக்கு ’வர்ண’ அன்னம் அளிப்பதுபோல்
ஓலை விடுவீரோ? உடனேயான் யோசியேனோ?
..
கண்ணுக்கே  அதுமாயக் குடைகவிப்பு! உண்மையிலே
பெண்ணுக்குள் ரகசியங்கள் பீறிட்டுப் புதைந்ததுபோல்,
..
மண்ணுக்குள் வைரஒளி மயங்கித் திகைப்பதுபோல்
சுண்ணாம்பில்  ‘அக்னியும்’ சொகுசாய்த் தூங்குதல்போல்,
..
மகானின் அழுக்குடைக்குள் மாமாயச் சித்துகள்போல்
பகாசுர வயிறாய் இவ்வானம் பம்மாத்து!
..
விமானம் போகையிலே விழிதிறந்து பாருங்கள்!
அமானுஷ்ய மேகங்கள் அத்துணையும் திரண்டுறையும்!
..
அத்தனையும் ஒரேநேரம் மண்மேலே ஆசைவைத்தால்
முத்தனைய பெண்களுடன்.. மூழ்கிவிடும் அபாயம்தான்!
..
வானுக்கு மூடியில்லை! வயதில்லை! தூரமில்லை!
தேனுக்கு மரணமுண்டோ? வானுக்(கு)அ ளவுகோலோ?
..
வானுக்குள் எத்தனைதான் பொக்கிஷங்கள்? மாமாய
ஊனுக்குள் ஓர்’கிழவன்!’ உயர்ந்த-ரத்தம்  பொதிந்தாற்போல்,
..
விண்மீனை அகப்படுத்தி அதுசிரிப்பாய்ச் சிரிக்கிறது!
கண்ணை வியப்பாக்கிக் ’காலம்’-தூள் செய்கிறது!
..
சூரியனைக் கவியாக்கித் தொன்ம’வரம்’ தருகிறது!
பாரிலதை நிதநிதமும் பவனி வரச்செய்து,
..
பூமியில் இருபுறமும் புதுவிழிப்புத் தருகிறது!
சாமி! அவ்வானம் மேல்நாட்டில் குளிர்தந்தே,
..
ஊதுலையில் போட்டதுபோல் சென்னையிலே கலாய்க்கிறதே!
சாதுவா வானம்? சட்டென்று கைக்குள்வர?
..
மாமாயம், மகாமந்த்ரம், மாச்சித்து,மா-விரிப்பு,
மாமா பாய்வதுபோல் தூமகேதுச் சாத்தான்கள்,
..
எல்லாமே கொண்டுஅது எம்டன்போல் விளங்கிட,..நீர்
கல்லாரும் அறிந்தஅதைக் கைக்குள்தான் இருக்குதென்றீர்!
..
கவியாலே ககனம்போய்க் கனவு பலகண்டு
புவியிலே ’பொடிசு’ நாம் புதையலைப்போய்த் தொடுவதுவா?
..
கண்ணற்றோன் யானையுரு கண்டு விளக்குதல்போல்
புண்ணுற்றோன் முதலிரவில் பூபாளம் பாடுதல்போல்,
..
’புதுக்கவி’ஞன் மரபிலே காவியம்செய்க் கனவைப்போல்
மதுஉண்டோன் அருள்வாக்காய் மகான்போல் உளறுதல்போல்
..
நல்லகவி நானும் பஜனைபோல் நடித்திலனே!
தொல்லைதரும் இவ்வானம் மிகநிஜமாய் வெகுதூரம்!!
..
ரகசியத்தைப் பிளந்துணர ராட்சச னாநான்?
குகையிருட்டை மலைக்குள்போய்க் குடைந்துதர, பித்தனாநான்?
..
ஒன்றுமில்லை, நம்ரத்தம் முதலிலெங்கு ஊறுமென்றே
தின்றுகொழுத் தபலருக்குத் தெரியாத விந்தையைப்போல்
..
கூப்பிட்டு அதைஅழைக்கக் குடைவிரித்தும் நினையேனே!
சாப்பிட்டு  என்கருத்தைச் சரியாகச் சீரணிப்பீர்!
..
அறிவாலே ஒருபக்க வாதத்தை அரங்குவைத்தேன்!
திறமுடையோர் கவிகாள்நீர்! சண்டைசெய்யச் சேருவிரே!

பேய்மழைத் தெரு

பேய்மழைத் தெரு

(நேற்று)_
ஒருபேயின் கைபோலே புயல்மழை ஓங்கிற்று!
கருவம் கொண்டுஅது  மண்ணையெல்லாம் கசக்கிற்று!
..
கண்ணாடிச் சுவர்வழியே பெண்களெல்லாம் காண்கின்றார்!
புண்ஆகும் தெருப்புலம்பல் அறியாமல் புன்னகைத்தார்;
..
குட்டைச் செடிகளையும்,’கொரியன்’ பூக்களையும்
நெட்டைக் கிளைகளையும் நீள்மழை,தன் கைகளினால்
..
பிய்த்தே எறிதல்கண்டு பிரமித்துச் சிரிக்கின்றார்!
கைத்த,பா கல்கசப்பு கடித்தவர்க்கன் றோதெரியும்!!
..
நான்குமணி பெய்தமழை தெருநாற அடித்ததய்யா!
கூன்கிழவி போல்குனிந்த சாக்கடை மூடியெல்லாம்
..
அடித்தமழை விரல்நோண்ட ஆகாயம் பார்த்ததய்யா!
துடித்த ‘நாற்றநீர்’ துள்ளியே பிளந்துவர,
..
மனித மூக்கெல்லாம் ‘விரல்மூடி’ கொண்டதய்யா!
இனித்ததெருக் கடைபஜ்ஜி இப்போது இனித்திடுமோ?
..
இருந்தாலும் பெட்டிக் கடைக்காரன் மூலையிலே
இருந்தொதுங்கி,நடுங்கிவந்த ஏழைகட்கே இவைதந்தான்!
..
தேங்கியநீர் ‘பேருந்தால்’ தெருக்கடைக்குள் புகுந்துவர,
தாங்கிவந்த் குடைகளெல்லாம் சாக்கடைநீர் குடித்(து)உருள,
..
‘அல்லோல கல்லோலம்’ சொல்அர்த்தம் அறிந்துகொண்டேன்!
மெல்லென வந்தஒரு மோட்டார்சைக் கிள்காரர்
..
முகமூடி அணிந்ததனால் கார்முட்டிக் கீழ்விழுந்தார்!
இகழ்ந்தஒரு வசையினால் இளம்பெண்சொல் இழந்ததுபோல்,
..
கார்களெல்லாம் வெள்ளத்தால் ‘தள்ளுமாடல் ஆகின!
சேர்ந்தஒரு சேறால் வெள்ளுடைகள் நிறம்மாற,
..
பள்ளிக் குழந்தைகள் பலமாக அழுதன!
எள்ளி நகைத்தனர் ஏராளம் போக்கிரிகள்!
..
நடைபாதைப் பழவண்டி!;;நனைந்துகொண்டே ஒருகாளை
குடைசாய்க்க, விழுந்தபழம் கொத்தாக அதன்வாய்க்குள்!!
..
டீக்கடை முதலாளி ‘தேதே’ என்(று)அதைவிரட்ட
போக்கற்ற அக்காளை ‘முட்டை’கொண்ட சைக்கிளைப்போய்
..
முகிலைஓர் மின்னலென முட்டிற்று! விழுந்தது!
நெகிழ்ந்தபல முட்டையெலாம் நெடுகத் தெருவழிய,
..
”டீக்கடையும் சைக்கிளுமே” மல்யுத்தம் நடுத்தெருவில்!
தாக்குப் பிடிக்காத சைக்கிள் காரர்(அ)ழ,
..
மிகஜோராய்க் காக்கைஎல்லாம்  மகிழ்ந்தே முட்டைகொத்த
வகையான ஜோக்என்று  வருவோர்கள் கைகொட்ட,
..
வெள்ளைக் கரு-வழுக்க விழுந்தார்கள் பலபேரே!
பிள்ளைகள் பாராமல் பிறழ்ந்தே உருண்டார்கள்!
..
எள்ளத் தனையும்இதை (இ)ரசிக்காத ஓர்ஏழை
அள்ளிமஞ்சள் கருவாலே தன்குவளை ரொப்பினனே!
..
கருணைகொண்ட ஓர்கிழவி துடைப்பத்தால் ’காட்சிகளை’
உருமாற்றத் துடைத்திலளேல்,.உங்களைப்போல்,பங்களாவின்
..
கண்ணாடிச் சுவர்வழியே ’களுக்’கென்றே சிரித்த’நல்ல’(?)
பெண்களைப்போல் நானு(ம்)இன்னும் சிரித்துப்பி ரமித்திருப்பேன்!!


Sunday, January 30, 2011

கவிதைக்கனல்


சூடு ஏறாத சொற்களால் கவிதை
..தொடுக்க எனக்குப் பிடிப்பதில்லை!
மாடுகள் கூட புல்இழுக் காமல்
..மந்தையில் சும்மா இருப்பதில்லை!

அப்போ திருந்த மக்கள் எல்லாம்
..அடிமைத் தனத்தால் குளிர்ந்திருந்தார்!
தப்பா வரிகளில் மாகவி பாரதி
..தணலை ஏற்றி உசுப்பிவிட்டார்!

பாரதி ஏற்றிய கவிதைக் கனலால்
..பாரத விடுதலை உறுதியாச்சு!
சாரதி உசுப்பிப் பெண்கள் எழுந்து
..சமத்துவ உரிமையும் கோரியாச்சு!

பாரதி தாசனின் புரட்சிச் சொற்களால்
..பாதி விதவையர்க்கு மணமாச்சு!
கூர்மைக் கனலில் சாதிப் பிரச்னை
..குனிந்தே வெந்து அமைதியாச்சு!

அன்றைய ஆட்சியர் கவிதைக் கனலுக்கு
..அரண்டு பணிந்த காலமது!
இன்றைய ஆட்சியரை எந்தச் சூட்டிலும்
..எருமை மாடாய் வைப்பதெது?

மானம் வெட்கம் இருந்தா லன்றோ
..மனிதன் சூட்டுக்கு பயந்திருப்பான்!
ஊனம் இல்லா ஆட்சி நடத்த
..ஒப்புக் கொண்டு நிமிர்ந்திருப்பான்!

அப்பரின் பாட்டால் சூலை நோயும்
..அப்படி யேஓடிப்போனதுவும்,
செப்புச் சுந்தரர் செப்பிய வரிகளால்
.. சிவனே நெருங்கி வந்ததுவும்,

பாட்டின் கனலுக்குப் பலத்த சாட்சி!-(எனில்?)-
..பழைய ‘டப்பா’ உதவிடுமா?
ஓட்டுப் பெட்டிகள் நிறைந்த பின்னாலே
..ஓட்டைக் கனலும் மதிப்புறுமா?-(ஆக)

கவிதைகள் படிக்க மனமே இல்லா,
 ...கற்றோர் இருக்கும் நாட்டினிலே
கவிதைக் கனலைப் பற்றிப் பேச
..கசப்புச் சுவைதான் நாவினிலே!

Monday, January 17, 2011

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?
மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்
..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!
ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை
..."ஆண்டால்",..மீசை வளர்வதுண்டு!
இங்க்லீஷ் எழுத்து "டபிள்யூ'போல்-ஐயா! 
..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?
பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!
.பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!"--
என்றே கேட்டால் சிரித்திடுவார்!-"கின்னஸ்"
..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!
இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,
..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்! 
பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர் 
..பத்து கலையும் அறிந்திடுவார்!
வீம்புக் கிதனைச் சொல்லவில்லை;-செய்யும்
..வேலை சொன்னால் மிகையுமில்லை!
ஈனும் பசுவுக் கருகிருப்பார்!-முதுகை
..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!
பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப் 
...பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!
காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்
...கரண்டி நெருப்பில் போடுகையில்,
வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்
..வட்டம் போடும் கலைதெரியும்!
ஜாதிச் சேவல் மடியில்வர,-கேப்பை.
....ஜலம்க லந்தே ஊட்டுகையில்
ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ 
..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!
விடலைப் பனையின் குருத்தெடுத்தே,-பாலர்க்கு
..விசிறி பண்ணித் தருகையிலோ
இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்
..ஈந்த 'சபரி" முகம்தெரியும்!
மீசை வளர்க்கும் கலையிலும்தான்,--லட்சிய
..வேட்கை அன்றோ தெரிகிறது! 
பூசை,'தெய்வம்' இவர்அறியார்!-உழைப்புப்
..."பொழுதே" கடவுள் என்றறிவார்!
கரணை கரணை யாய்க்கைகள்!- நல்ல
..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!
கருத்த உருவம், "காளி'யைப்போல்!-எனினும்
..கருணை வடிவம் அவர்இதயம்!

என் கணக்கு வாத்தியார்

என் கணக்கு வாத்தியார்


கணக்கிலே சுமார்யான்! என்றால்,
..கணக்கிலே கசப்புச் சேர்த்த
பிணக்குவாத் யாராய் ராமன்
...பிரம்படி கொண்டே தாக்கின்
கணக்குப்போ டுவனா?அன்னார்
..கண்கண்டால் ஓடினேன் காதம்.
மணக்கிற மல்லி கையில்-
...மலத்தினைச் சேர்த்தார் அய்யா!


..(வேறு-)-


உருட்டு விழிகள்! வட்டில்
..ஒப்பத் தலையில் பாகை!
சுருட்டு வீச்சம்! வாயில்!
..சுத்த ஆங்கி லத்தில்
வெருட்டும் திட்டு! மீசை
..வேறு! அய்ய னாரோ
இருட்டு வண்ண வாத்யார்?
..இவரின் பேரா ராமன்?


என்றே சிமிட்டும் கண்ணோ(டு)
..எவரும் நகைத்தார் அன்று!--
என்ன வாத்யார் அன்னார்
..என்றே பசங்கள் திட்ட,
தின்னும் பண்டம் போன்ற
..தேன்கணக் கிற்கும் அஞ்சி
மின்னும் பிரம்பின் வீச்சை
..மிகவே வாங்கி நொந்தார்!


குரலில் இடியின் ஓசை!
...குண்டு உடம்பால் தூக்கம்!
பொருட்டாய் மதியார் எம்மை!
..பொறுமை சற்றும் இல்லை!
அருமை கணக்(கு)என் னாமல்
..அதட்டும் உறுமல் சிங்கம் !
இறந்தார் மார்அ டைப்பால்!
..எனக்கோ நூறு மார்க்கே!