Sunday, November 9, 2025

 19-11-25

முன்னர்பெற்ற  மோதகம் முற்றுமுண் ணாமலே

இன்றுவரும்ஏ ழைக்காய் இருத்தினை—என்னை

வசப்படுத்திக்  காக்கின்ற  வள்ளல்நீ   -என்றன்

தசச்செய்யுள் வாழ்கஎனச்…  சாற்று!..

 

அத்தாழநல்லூர்  அன்னையே!

…………………………………………………………………………..(கவியோகி   வேதம்)19-08-25

முத்தைப்போல்   புன்னகை,  முதுகிலோ   வஞ்சக்கண்,

     முரடர்கள்   நடுவில்நான்  ஏனம்மா?

   முடியாத போதிலும்,சலிக்கின்ற வேளையும்,

     முனகலுடன் கழிக்கிறேன்    பாரம்மா!

செத்தையும்   சிலசமயம்     குளிர்காயப் பயன்படும்;

    சிலமனிதர்  ஒன்றுக்கும் உதவாரே!

  சிறப்பான பிறப்பைநீ  எனக்கிங்கே  அளித்துமே,

      சீர்பெற்ற  உற்றாரை அளித்திலையே!

கெத்தாய்என்   ஊழ்-எனை  அச்சுறுத்தும்     போதிலே

     கிரணம்போல்  வந்தேநீ  காவல்செய்வாய்;

     கீழ்மேலாய்   உன்நெற்றி  தொட்டொரு  சுட்டிகண்டேன்

      கிண்ணென்(று)அவ்  வைரக்கல்   கவர்ந்ததே!

   அத்தாழ  நல்லூரில் பெருமாளின்  மார்புறை

     அன்னையே  என்மஹா  லட்சுமியே!

    ஆதரவாய்  என்பக்கம்  நீயிருந்தால் போதுமே!

       அகிலத்தை வெற்றிகொள் வேனே!    —1)…

2  வன்முறை காச்மீரில் வடக்கேயும்  ஆள்பலி

      வருந்தினோம் கண்டுநாம்  கண்முன்னே;

        வைரம்போல்  சுதந்திரம் பெற்றாலும்   பயனென்ன?!

         வாழ்வென்றால்  அன்பிலையோ சொல்தாயே!!

   கன்னலாம்   விடுதலை   பலபேர்க்குத் தறுதலைக்

          களமாகப்  போகுதே! அன்னையே!  

      காதில்உன்  தோடுகள்   கவிதையைக்  கிளப்பிடும்,

         கணநேரம்  அமைதியைத் தந்திடும்;

   என்றாலும் அரசிலே நம்மவர்  புகுந்தபின்

       எத்தனை   ஊழல்கள்,  மோசடி;

        எப்போது   நம்நாடு   சீர்பெறும்  என்றுநம்

            இந்தியா உலகின்முன் ஒளிபெறும்?

    பொன்போன்ற நதியோரம்  அமைந்தஎம் கோவிலில்

        பொலிகின்ற  பெருமாளின்  மார்புறைப்

           பூரணப்  பூவே! இலக்குமித்  தாயே!

        புதிதாய்ஓர்  ஆக்கினை  அருள்வாயே!!

  

    

 

 

No comments:

Post a Comment