Sunday, November 9, 2025

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்..

**************************************(கவியோகி வேதம்)-08-11-25

எந்தத் தலைப்பிலும் எழுதும்   திறன்பெற்ற

அரங்கத் தலைவரை  அழகுற வணங்கினேன்;

என்னால் முடிந்த   எண்ணம்   தருகிறேன்;--

அந்த  நாட்கள்  எங்கு போயின?—ஆ!

சிந்தனை புரண்ட  சீர்மிகு  நாட்கள்;

கருத்துகள் உதிர்ந்து கனிதந்த நாட்கள்;

திரண்ட  உடனேயே திருப்திக்  கணங்கள்!

சீடர்க்  கெல்லாம்  அவற்றைப் பகிர்ந்து

புதுமைப் பாதை பூரித்த நாட்கள்,

எல்லாக் கணமும் எங்கு  போயின?

 அந்தக் கருத்துகள்,  ஆழச் சிந்தனை

முதுமை  வந்ததும்   முடங்கிப் போனவோ?

இளமை  இருப்பின்தான் மூளையில் இருக்குமோ?

உடுக்கை  இழந்தாற்போல் ஏனோ   ஆயினேன்!

மாத்திரை களில்தான்  யாத்திரை  தொடர்கிறது;

படுக்கையில்    வீழ்ந்ததும் பாதாளம் விரியுமோ?

கடுக்காய்   கொடுக்குமோ  கருத்துப் புதுமைகள்?

எத்தனை  புதுமைகள்! எத்தனை  பாதைகள்;

வெள்ளம்  வயல்களில் தங்காத வண்ணம்

வடிய புத்தியில்  வந்த   கருவிகள்,

வறட்சிக் காலத்தில்  முகிலைக் கொணர்ந்தே(வீடுமுன்)

மழையைத் திரட்டிய  சிந்தனைச்  சிதறல்கள்

ஊழல்கள் களைய  உதவிய ராணுவம்,

 சட்டக்  கிடுக்கியில்  அற்பரை நெருக்கல்,

என்றபல்  சிந்தனை  எல்லாம் போச்சே!

  கிராமங்கள் வளர உதித்த கருத்தும்

  மராமத்து செய்யாமல்   மங்கிப் போயிற்றே!

  மறதி  என்கிற பாம்பு  விழுங்கியதே!

.   சரிதான். சென்றது கனவாய்ச்  சரிந்தது;

   என்றே   கொள்கிறேன்.இனிவரும் கருத்தை

  ஏட்டில்  எழுதுவோம்;இளம் விஞ் ஞானிகள்

   கையில் தந்தால் புதுமை செய்வரே!

  சரியே;சின்னாள் போகட்டும்;  பார்ப்போம்.

 கருகிய மொட்டின்  பக்கமே இன்னொரு

 விரிந்த மொட்டு வளராமல் போகுமா?

நேற்றைய குயிலும் இன்றுவந்து   கூவாதா?

மனத்தை   இளமையாய்  வைப்போம்;

ஜனிக்கும்  ஆயிரம் சிந்தனை!தளர்விலை;

 நாளைய பாரதம் நன்றாய் இருக்கும்.

 சிந்தனைப்  பந்தல் சீராய்  விரியும்;

எனும்   நம்பிக்கை யுடனே  எழுந்தேன்;

வாழ்க  நேரிய எண்ணம்; வாழ்க என்-நாடு!(வேதம்)-

 

No comments:

Post a Comment