Monday, January 17, 2011

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?

ஒரு பலாவின் முள்ளுக்குள்ளே..?
மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்
..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!
ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை
..."ஆண்டால்",..மீசை வளர்வதுண்டு!
இங்க்லீஷ் எழுத்து "டபிள்யூ'போல்-ஐயா! 
..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?
பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!
.பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!"--
என்றே கேட்டால் சிரித்திடுவார்!-"கின்னஸ்"
..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!
இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,
..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்! 
பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர் 
..பத்து கலையும் அறிந்திடுவார்!
வீம்புக் கிதனைச் சொல்லவில்லை;-செய்யும்
..வேலை சொன்னால் மிகையுமில்லை!
ஈனும் பசுவுக் கருகிருப்பார்!-முதுகை
..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!
பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப் 
...பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!
காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்
...கரண்டி நெருப்பில் போடுகையில்,
வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்
..வட்டம் போடும் கலைதெரியும்!
ஜாதிச் சேவல் மடியில்வர,-கேப்பை.
....ஜலம்க லந்தே ஊட்டுகையில்
ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ 
..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!
விடலைப் பனையின் குருத்தெடுத்தே,-பாலர்க்கு
..விசிறி பண்ணித் தருகையிலோ
இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்
..ஈந்த 'சபரி" முகம்தெரியும்!
மீசை வளர்க்கும் கலையிலும்தான்,--லட்சிய
..வேட்கை அன்றோ தெரிகிறது! 
பூசை,'தெய்வம்' இவர்அறியார்!-உழைப்புப்
..."பொழுதே" கடவுள் என்றறிவார்!
கரணை கரணை யாய்க்கைகள்!- நல்ல
..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!
கருத்த உருவம், "காளி'யைப்போல்!-எனினும்
..கருணை வடிவம் அவர்இதயம்!

1 comment: